Friday, June 3, 2011

Idhil mattum Thunai Iraiyaa

மது மயங்கி மதி இழந்த மன்னவனின் மாளிகையுள் 
எது போகும் : எல்லாமும் - நாய், பேயும், பொய் புரட்டும்
சதிராடும் விலைமகளும்! வீணென்று விரட்டாமல்
மதி இழந்த மன்னவனே எதிர் கொண்டு விழைவானே.

நிம்மதியும் நிதர்சனமும் அமைதியுமாங்கழகுமில்லை
துன்மதியின் படபடப்பொடு ஆடம்பரமாரவாரம்
இன்னும் பல நிறைந்தபின் வருவதெது- அழிவேதான்
மன்னவனோ நானே நான்- மாளிகையோ உடலேதான்!

சரியிலையே சிற்றின்பம்- சிலநாளோ , சிலகணமோ:
பொறிவாயில் பொறிவைத்து, தீதெதையும் தீ வைத்து 
அறிவாற்றலால் 'அழிவு' அதையும், ஆரவாரப் பேய்களையும் 
பிரிவாற்றிப் போகவிட்டு , பெறுவோமே பேரின்பம்.

அகங்கார மாணவத்தை ஆற்றோடு போகவிட்டு 
பகவானின் பதம் பற்றி மமகாரம் ஒழித்திட்டால் 
அகத்தினிலே அமைதியேதான் அதன் பின்னே சுகமே தான் 
சுகமதுவே நிலையன்றோ- தெளிந்த பின்னே தேவைஎதோ !

சுவையூறும் நற்பண்டம், மிடுக்குடை நல்லாடை -
இடை நோகா மென் மெத்தை, நற் துணையும்  மாளிகையும்
இவை யாவும் மெய்தனுக்கே- சுகமதுவும் நிலையல்லவே!
மறைபொருளே! மெய்ப்பொருளே! நானிந்த உடலல்லவோ௧

கண்மறைக்கும் கடுங்கோபம், மதி மயக்கும் மகிழ்வுணர்வு:
எண்ணங்கள் வீணானால் வறுமை நிறை தனியுணர்வு ;
எண்ணிலா எவ்வுணர்வுகளே நிறைவதனைத் தரவிலையே-
'நான்' என்ன அறிகிலனே- உணர்வெல்லாம் மனத்தளவோ!

உடலிதுவும் நானல்ல; அண்டம்படை அகப்பொருளே-
கடலாழம் மிக்குற்ற மனமதுவும் 'நா'நன்றென
விடை தந்தது என் மதியே! முன்னவனே விபரீதம்:
விடை மதியும் 'என்' மதியே- பின்-மதியுமல்ல 'நான்' என்றால்-

நானாரென நானறியேன் - கண் கட்டும் வித்தைஎனோ!
'நா'நெனக்கே தெரிந்திலனே-பின் தேவையென ஏதுரைப்பேன்!
நானதையே  நானுணர நாளெல்லாம் கழியட்டும் -
நீஎனக்கு இதில் மட்டும் பரம் பொருளே  துணை இறையா!  
  
 
  
 

Sunday, May 29, 2011

Arupathile Enakku Tha

நாடி தளர நரை தெரிய அறுபதின் நாற்சந்தியிலே 
ஓடி வந்த களைப்புடனே ஓர் நிமிடம் ஒதுங்குகிறேன்;
ஓடிவிட்ட வாழ்விதனில் நாற்ச்சந்தி எத்துனைதான் ! 
கோடி புண்ணியம் - நல் வழி தான் இனி காட்டிடையா :

வந்த சுவட்டினிலே திரும்ப ஓர் வழியில்லை ,
எந்த திசை ஐயா இனி நான் செல்வதற்கு !
வந்தனை செய்யவோ அன்றி என் உடல் வாட 
உந்தன் சந்நிதியில் விரதங்கள் காக்கவோ !

உற்ற மனைவி தன உறுதுணையை வாக்களிக்க 
பெற்ற மகளவள் பேதையாய் நின்றழைக்க 
மற்றவரெலாம் என் தேவை அறிந்தழைக்க
'வெற்று நானு'ம் இனி அவ்வழியே செல்வேனோ :

நோயுற்ற மாந்தர் தம் வேதனையைத் தீர்த்திடவே 
பேயாய் அலைந்து நன்நேரமெல்லாம் மருந்தாற்றி
ஓயாமல், ஒரு  கணமும் உந்தனையே நினையாமல் 
போய்விடவா- இவ்வூன் தான் போய் சேரும் வரை !

ஊரும் சதமல்ல உறவும் நிஜமல்ல 
பேரும், பெரும்பணமும், புகழ் வாழ்வும் 
நாருமிவ் வுடலும் வேளைதான் வந்திட்டால்
சேருமிடமறியேன்- அறிந்தும் அறிவிலனே .

'ஏமப் பெருந்துயில் மந்திரப்பட்ட' நா நின் 
நாமம் முழங்கி நன்ஞானம் எய்திட்டே 
காமக்ரோதாதி கடு விலங்கருத்திட்டு
சாமம் முடிந்து விடிவெள்ளி காண்பேனோ-

அலைகடல் நீ, நான் அலை, சேர வழி காட்டு
நிலையிலா வாழ்வறுத்து நின் பதம் துணை கூட்டு 
தளையகன்று ஆன்ம நான் பரமான்மாவென்றுரை
தலைமகனே, நல்வழியை அறுபதிலே எனக்குத் தா.